என் தமிழ்

சென்னை விமான நிலையத்தில் 28-வது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்தது

TH31_BU_CHENNAI_AI_1194284f

அக்டோபர், 25 சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன. 2 ஆண்டுகளாக புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்படுகின்றன. ஆனாலும் இந்த விமான நிலையங்களில் கண்ணாடிகளும், மேற்கூரைகளும் அடிக்கடி தொடர்ந்து இடிந்து விழுந்து வருகின்றன.

இந்த 2 ஆண்டுகளில் இதுவரை 8 முறை மேற்கூரைகளும், 7 முறை கண்ணாடி கதவுகளும், 8 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் உடைந்து விழுந்துள்ளன. இதுவரை எந்த பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு வருகை பகுதியில் உள்ள குடியுரிமை சோதனை செய்யும் இடத்தில் உள்ள மேற்கூரை நேற்று இடிந்துவிழுந்தது. அதில் 3 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வந்து உடைந்த பகுதிகளை அகற்றினார்கள்.

மேலும் அப்போது பிரான்ஸ்சில் இருந்து டெல்லி வழியாக பயணிகள் வந்திருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விமான நிலையத்தில் 28-வது முறையாக மேற்கூரை விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது.

தொடரும் இந்த அவலநிலைக்கு எப்போது விமோசனம் கிடைக்கும் என்று பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Scroll to Top