09 ஜூலை 2026 : செலகாங்கூர் மாநிலத்தில் நிலையான செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை உருவாக்கும் முன்னோடித் திட்டத்தை ஆராயும் நோக்கில், SSDU Innovations Sdn. Bhd. மற்றும் EER Digital Sdn. Bhd. ஆகிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த முயற்சி, எரிசக்தி திறன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மேம்பாட்டை மையமாகக் கொண்டதாகும்.
இந்த ஒத்துழைப்பின் மூலம், செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களில் பயன்படுத்தப்படும் கிராபிக்ஸ் செயலிகளுக்கான மூழ்கடிப்பு குளிரூட்டும் தொழில்நுட்பத்தின் செயல்திறன் மற்றும் பொருத்தம் ஆய்வு செய்யப்படவுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வழக்கமான குளிரூட்டும் முறைகளுடன் ஒப்பிடும்போது மின்சாரப் பயன்பாட்டை 35 முதல் 40 விழுக்காடு வரை குறைப்பதுடன், நீர் பயன்பாட்டையும் கணிசமாகச் சேமிக்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSDU நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கடாபி முஸ்லி கூறுகையில், இது புதிய தரவு மையம் அமைக்கும் திட்டமல்ல என்றும், எதிர்காலத்தில் மாநில அரசின் முடிவுகளுக்கு வழிகாட்டும் வகையில் தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்யும் ஆரம்பகட்ட முன்னோடித் திட்டம் என்றும் விளக்கினார்.
இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், நிலையான செயற்கை நுண்ணறிவு தரவு மையத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் மாநிலமாக செலகாங்கூர் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் இது முக்கிய பங்களிப்பை வழங்கும் என்று நம்பப்படுகிறது.






