என் தமிழ்

சூடானில் மனிதாபிமான உதவிக் குழு மீது தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்

தெற்கு சூடான், 01 ஜூலை 2026 : தெற்கு சூடானின் ஜோங்லே மாநிலத்தில் தெளிவாக மனிதாபிமான உதவிக் குழுவாக அடையாளம் காணப்பட்ட வாகன அணிவகுப்பு மீது நடத்தப்பட்ட ஆயுதத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஐந்து மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்தனர். மேலும், பல பொதுமக்களும் உயிரிழந்ததாகவும் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், அவை சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகவும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த உதவிக் குழு, உலக உணவுத் திட்டத்தின் (WFP) ஆதரவுடன் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ஆயுததாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தெற்கு சூடானில் மனிதாபிமானப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் அந்நாட்டில் 29 மனிதாபிமானப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

Scroll to Top