என் தமிழ்

உறுதியான முடிவுகள் இன்றி அமெரிக்காவுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை: ஈரான் திட்டவட்டம்

இஸ்தான்புல், 31 மே 2026 : ஈரானிய மக்களின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யாமல், அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தத்தையும் ஏற்க முடியாது என்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும் முக்கிய பேச்சுவார்த்தை பிரதிநிதியுமான முகம்மது பகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.

“எதிரிகளின் வாக்குறுதிகளிலும் வார்த்தைகளிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உறுதியான மற்றும் நடைமுறை முடிவுகள் கிடைத்த பிறகே ஈரான் தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றும்,” என்று அவர் நாடாளுமன்றத்தின் மெய்நிகர் அமர்வில் உரையாற்றியபோது தெரிவித்ததாக ஈரான் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள், மேற்காசியாவில் ஏற்பட்ட மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பதற்றத்தை குறைப்பதற்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இரு தரப்பும் இன்னும் முக்கிய விவகாரங்களில் ஒருமித்த முடிவை எட்டவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை முழுமையாக நிறுத்துவது மற்றும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது ஆகியவை அமெரிக்காவின் முக்கிய இலக்குகளாக உள்ளதாகக் கூறியுள்ளார். இதேவேளை, அமெரிக்கா சமர்ப்பித்த புதிய அமைதித் திட்டத்தில் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ஈரான் தனது முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை விடுவிக்க வேண்டும் என்றும், நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து நடைமுறையில் இருந்தாலும், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் நிரந்தர உடன்பாட்டை ஏற்படுத்தத் தவறியுள்ளன. இருப்பினும், இரு நாடுகளும் தொடர்ந்து முன்மொழிவுகள் மற்றும் எதிர்முன்மொழிவுகளை பரிமாறிக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top