சந்தைமலேசியாவட்டாரச் செய்திகள்

இலக்கவியல் தொழில்நுட்பத்தில் வட மாநிலங்களுடனான ஒத்துழைப்பை இலக்கவியல் அமைச்சு மேலும் வலுப்படுத்தும். – கோபிந்த் சிங் உறுதி

ஜார்ஜ் டவுன், ஏப்ரல் 29, 2025 – இலக்கவியல் அமைச்சு, பினாங்கு மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் இலக்கவியல் தொழில்நுட்ப மாற்றத்தை ஊக்குவிக்கும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ உறுதி கூறினார். இன்று காலை பினாங்கு, ஜார்ஜ் டவுனில் நடைபெற்ற மலேசியா டிஜிட்டல் திறந்த நாள் (Malaysia Digital – MD) 2025 நிகழ்ச்சி இதற்கு ஒரு சான்று என அவர் கூறினார். .

இலக்கவியல் முன்னெடுப்புகளின் மேம்பாடு, மலேசியாவை புதுமை, புத்தாக்கம், வாய்ப்புகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய பரிணாமத்திற்குக் கொண்டு செல்லும் முயற்சிகளைக் கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைகிறது.

நாடு இலக்கவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற வட மாநிலங்களும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாகச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தினார். பினாங்கு, கெடா, பேரா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் இலக்கவியல் தொழில்நுட்பத்தின் அனைத்து பயன்பாடுகளும் நன்மைகளும், மாநில வட்டார இருப்பிட பேதமின்றி அனைத்து மக்களும் பெற இலக்கவியல் அமைச்சு பாடுபடும்.

கடந்த சில மாதங்களாக நாட்டின் இலக்கவியல் தொழில்நுட்பத்தை வலுப்படுத்தும் நோக்கில், இலக்கவியல் அமைச்சு பல முக்கிய திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

நெறிமுறைக்குட்பட்ட, பாதுகாப்பான, அனைத்தையும் உள்ளடக்கிய செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டு வளர்ச்சிக்காக தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO)) தோற்றம் கண்டது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், நேற்று முதல் அமலுக்கு வந்த தரவு பகிர்வுச் சட்டம் 2025, அரசாங்கத்துக்கும் நிறுவனங்களுக்குமிடையேயான, வலுமிக்க அடித்தளத்தை ஏற்படுத்துவதோடு, தரவுகளை ஆதாரமாகக் கொண்டு முடிவுகள் மேற்கொள்ள அந்தச் சட்டம் வழிவகுக்கும்.

இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படும் இலக்கவியல் பொருளாதார கழகம் (MDEC) குறு, சிறு நடுத்தர தொழில்முனைவர்கள் மின்னியல் வணிகத்தில் தங்களை தகுதிபடுத்திக் கொள்ள மின்னியல் வியாபாரத் திட்டத்தை(Inisiatif Pendigitalan Perniagaan-BDI) செயல்படுத்துகிறது. இந்த முயற்சிகள் அனைத்தும் மலேசியா டிஜிட்டல் (Malaysia Digital-MD) 2025-ன் நோக்கம் வெற்றியடைய பெரும் பங்காற்றுகின்றன.

மலேசியாவில் 3,891 மலேசிய இலக்கவியல் (MD) தகுதி பெற்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன, இதில் வடக்கு மண்டலத்தில் 254 நிறுவனங்கள் அடங்கும். MD-ன் கீழ் புதிதாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் ஜனவரி முதல் மத்திய ஏப்ரல் 2025 வரை மொத்தம் RM16.2 பில்லியன் முதலீட்டை உறுதியளித்துள்ளன. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6,480 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தரவு மையம் மற்றும் கிளவுட் துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் முக்கிய பங்களிப்பாக உள்ளன, இது மொத்த முதலீட்டில் 60% க்கும் அதிகமாகும்.

நெதர்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், இந்தியா மற்றும் ஐக்கிய சிற்றரசு நாடுகளிலிருந்து நேரடி முதலீடுகள், மலேசியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கை தொடர்ந்து வலுவாக உள்ளதை புலப்படுத்துகிறது. ஆக நமது நாடு இலக்கவியல் முதலீடுகளுக்கான முதன்மை இடமாக உள்ளது என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

எதிர்காலத்தில், மலேசியா 2025 மலேசியா செயற்கை நுண்ணறிவு உச்சநிலை மாநாடு மற்றும் 2025 கோலாலம்பூர் ஸ்மார்ட் சிட்டி கண்காட்சி ஆகியவற்றை நடத்தவுள்ளது.

இந்த இரண்டு திட்டங்களும் இலக்கவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் நிலையான நகர மேம்பாடு ஆகியவற்றில் வட்டார நாடுகளின் தொழில்நுட்ப மையமாக மலேசியாவின் நிலையை மேலும் வலுப்படுத்தும்.

மாநில அளவில் செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இலக்கவியல் அமைச்சு, பினாங்கில் இலக்கவியல் அமைச்சின் வடக்கு மண்டல அலுவலகத்தை நிறுவியுள்ளது.

இந்த மையம் பினாங்கு, கெடா, பேராக் மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களுக்கான இலக்கவியல் தொழில்நுட்பச் சேவைகளை வழங்குவதோடு, உள்ளூர் பங்குதாரர்களுக்கும் தேசிய திட்டங்களுக்கும் இடையே ஒரு பாலமாகவும், திறன் மேம்பாடு மற்றும் இலக்கவியல் அமைப்புக்கான ஆதரவாகவும் செயல்படும்.

நாட்டின் இலக்கவியல் பொருளாதாரத்தில் பினாங்கு ஒரு முக்கியமான மாநிலமாக உள்ளது, குறிப்பாக செமிகொண்டாக்டர் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் இருப்பு மற்றும் மின்னியல் பொருளாதாரத்தில் விரைவான வளர்ச்சி கண்டு வரும் முக்கிய மாநிலங்களில் ஒன்று பினாங்கு ஆகும்.

பினாங்கு மாநிலத்தில் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட MD தகுதி பெற்ற நிறுவனங்கள் வழி RM1.23 பில்லியன் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதோடு, 266 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முதலீட்டின் பெரும்பகுதி தரவு மையம் மற்றும் கிளவுட் துறையில் இருந்தாலும், 60% க்கும் அதிகமான முதலீடுகள் ஒருங்கிணைந்த சுற்று வடிவமைப்பு (IC) மற்றும் உள்ளிணைந்த மென்பொருள் (embedded software) போன்ற உயர் மதிப்புள்ள துறைகளை உள்ளடக்கியுள்ளது.

உள்ளூர் தேவைகளை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், விரைவான நடவடிக்கைகளை எடுக்கவும், தேசியக் கொள்கைகள் இப்பகுதிக்கு உண்மையிலேயே பயனளிப்பதை உறுதிப்படுத்தவும் உதவும்.

இலக்கவியல் அமைச்சு, MDEC மற்றும் பல்வேறு பங்குதாரர்களின் ஆதரவுடன், மலேசியாவின் தைரியமான, உள்ளடக்கிய மற்றும் புதுமை சார்ந்த டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்க உறுதிபூண்டுள்ளது.

பினாங்கில் அமையப்பெறும் இலக்கவியல் மையம், வட்டார இலக்கவியல் தேவைகளை பூர்த்திசெய்யும் தலமாகவும், அரசாங்கத் திட்டங்கள் விரைவாகச் சென்றடையவும் உதவுவதோடு, சுற்றுவட்டாரத்திற்கு நன்மையாக அமையும்.

நாடு இலக்கவியல் தொழில்நுட்பத் துறையில் பீடுநடைபோட, இலக்கவியல் பொருளதார கழகம், இலக்கவியல் தொழில்நுட்ப துறைசார் அமைப்புகளோடு இலக்கவியல் அமைச்சு இணைந்து செயலாற்றும் என கோபிந்த் சிங் டியோ உறுதியளித்தார்.

#GobindSinghDeo
#MDEC
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews