மலேசியாவட்டாரச் செய்திகள்

ஈப்போவில் உரிமம் பெறாத சூதாட்ட நடவடிக்கை; நால்வர் கைது

ஈப்போ, 28/04/2025 : பேராக், ஈப்போ சுற்றுவட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனை நடவடிக்கைகளில் உரிமம் பெறாத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒரு பெண் உட்பட நால்வரை போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையின் தீயொழுக்கம், சூதாட்டம் மற்றும் குண்டர் கும்பல் நடவடிக்கை பிரிவான D7-னைச் சேர்ந்த போலீசார், அவர்களை கைது செய்ததாக மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.

மேலும், கணினி, கைப்பேசி, பத்து லாட்டரி சீட்டுகள் உட்பட ஒரு லட்சத்து பத்தாயிரம் ரிங்கிட் ரொக்கத்தையும் போலீசார் அவர்களிடமிருந்து கைப்பற்றியதாக டத்தோ நோர் ஹிசாம் கூறினார்.

“அமலாக்கத் தரப்பினரை ஏமாற்றும் வகையில், உரிமம் பெறாத அந்த சூதாட்ட விற்பனை நடவடிக்கைகளை கைப்பேசிகள் மூலமாக அவர்கள் மேற்கொண்டு வந்துள்ளது தெரியவந்தது. மேலும், இந்த உரிமம் பெறாத சூதாட்டத்தின் வருமானத்திற்கான ‘கணக்கிடும் மையமாக’ ஒரு வீட்டைப் பயன்படுத்தி வந்துள்ளனர்”, என்று அவர் கூறினார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் அவர்கள் அனைவரும் ஈப்போ சுற்று வட்டாரத்தில் முனைப்பாக செயல்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்தது.

அதோடு, அவர்கள் அனைவரும் சூதாட்ட ஏற்பாட்டாளருடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

1953-ஆம் ஆண்டு திறந்தவெளி சூதாட்டச் சட்டம் செக்‌ஷன் 4a(a) -இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

Source : Bernama

#Ipoh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews