மலேசியா

91-ஆவது ஆண்டாக கொண்டாடப்படும் மலேசிய கடற்படை தினம்

கோலாலம்பூர், 27/04/2025 : நாட்டின் பாதுகாப்பையும் அமைதி நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்கு தவறாமல் பணியாற்றும் முக்கிய துறைகளில் தி.எல்.டி.எம் எனப்படும் அரச மலேசிய கடற்படையும் ஒன்றாகும்.

கடலோர எல்லைகளைக் கண்காணித்து, கடல் வழித் தாக்குதல்களையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுக்க வலிமையாக நிற்கும் துறையாக தி.எல்.டி.எம் விளங்குகின்றது.

குடும்பங்களைப் பிரிந்து, இரவு பகல் பாராமல், கடமையில் ஈடுபடும் அதன் வீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் நாட்டின் மீதான தங்களின் பற்றுதலைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் ஏப்ரல் 27-ஆம் தேதி அரச மலேசிய கடற்படை தினம் கொண்டாடப்படுகின்றது.

கடலுக்கு அருகில் இருப்பதும், அதில் பணியாற்றுவதும், ஒவ்வோர் கடற்படை வீரரின் வாழ்க்கையிலும் இன்பம் மற்றும் சவால்களை ஏற்படுத்துகின்றது.

அவ்வகையில், கடற்படை வீரராக தமது அனுபவம், தனிப்பட்ட சாதனைகள், அந்தச் சாதனைகளுக்கான சவால்கள் என பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொண்டதாக கூறுகின்றார் அரச மலேசிய கடற்படை துறையில் 40 வருடம் 6 மாதங்களுக்குப் பணியாற்றி ஓய்வுப் பெற்ற கேப்டன் சந்திரமோகன் பாலகிருஷ்ணன்.

“என் கடற்படை பயணங்கள் மிகவும் சுவாரஸயமாகவும் சுலபமாகவும் இருந்தது. ஏழு கப்பல்களுக்கு அதிகாரியாகவும், அதில் மூன்று கப்பல்களுக்குக் கேப்டனாகவும் இருந்தேன். அதை தவிர்த்து, நேர்முக சந்திப்புகளை நடத்தியுள்ளேன். 26 நாடுகளுக்கு நான் பயணம் செய்திருந்தேன்”, என்று அவர் கூறினார்.

கடல், அதன் உயர்ந்த அலைகள், அவ்வப்போது ஏற்படும் கடும் புயல்கள் ஆகியவை தம்முடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், உணர்ந்து காணும் புதிய வாழ்க்கையாகவும் மாறியதாக அவர் கூறினார்.

“பல நாள், பல வாரங்கள், பல மாதங்கள் கடல் பயணம் மேற்கொண்டிருந்தேன். நம் இந்தியர்கள் கடற்படையில் இருப்பது மிகவும் குறைவானவர்கள் தான். இருந்தாலும், அனைவரும் சிறப்பாக வேலை செய்கின்றனர். மலேசிய இராணுவ கடற்படை துறைக்கு சிறந்த நற்பெயரை வழங்கி கொடுத்துள்ளனர்”, என்றார் அவர்.

மேலும், இத்துறையில் தமக்கு ஏற்பட்ட ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பின் காரணமாக தமது பிள்ளைகளையும் இராணுவ துறையில் இணைத்திருப்பதாக, மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான கேப்டன் சந்திரமோகன் கூறினார்.

இதனிடையே, எதிர்வரும் காலங்களில் அதிகமான இந்திய இளைஞர்கள் இத்துறையில் இணைந்து நாட்டிற்கும் மக்களுக்கும் சிறந்த சேவையை வழங்க வேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பையும் அவர் தெரிவித்தார்.

”என்னுடைய ஆசை என்னவென்றால், இன்னும் நிறைய இந்தியர்கள் இத்துறையில் சேர்ந்து கப்பலோட்டி தமிழர்களாக உருவாக வேண்டும். நம்முடைய நாட்டிற்கு நாமும் ஒரு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும்”, என்று அவர் தெரிவித்தார்.

91-ஆவது ஆண்டாக கொண்டாடப்படும் அரச மலேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு, பெர்னாமா செய்திகள் தொடர்புக் கொண்டபோது, புஸ்பஹானாஸின் முன்னாள் நிர்வாக இயக்குனருமான கேப்டன் சந்திரமோகன் பாலகிருஷ்ணன் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

Source : Bernama

#91NavyDay
#Agong
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews