மலேசியாவட்டாரச் செய்திகள்

மக்களைப் புறக்கணிக்காமல் வரிசான் கே.எல் திட்டம் அமைய வேண்டும் – பிரதமர்

கோலாலம்பூர், 25/04/2025 : இன்று அறிமுகப்படுத்தப்பட்ட WARISAN KL: மலேசிய மடானி பாரம்பரிய தலைநகர் திட்டத்தை விரைவுப்படுத்துவதோடு, பெரும்பான்மை மக்களின் தேவையையும் வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

கோலாலம்பூரைப் புதுப்பித்து நவீன வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இத்திட்டம் உள்ளடக்கி இருந்தாலும், அது மக்கள், அவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் புறக்கணிக்கக் கூடாது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“மலேசியா புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கட்டமைப்புத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால் பூமியில் வேரூன்றியுள்ள அதன் பாரம்பரியம், அதன் கலாச்சாரம், அதன் மதிப்புகள் பெரும்பாலான மக்களுக்கு வசதியை வழங்குகின்றன. எனக்கு சிறிய கடைகள் மற்றும் சிறிய உணவுக் கடைகள் வேண்டும். ஆனால் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும். அழகாக இருக்க வேண்டும். 75-80 விழுக்காட்டு மக்கள் அவற்றை பயன்படுத்துகிறார்கள்”, என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூர் நாகராண்மைக் கழகத்தின் கட்டிடத்தில் அத்திட்டத்தைத் தொடக்கி வைத்தபோது அன்வார் அவ்வாறு கூறினார்.

Warisan KL திட்டம், ​​பெரும்பான்மையான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, மேம்படுத்தப்பட்ட சுல்தான் அஸ்லான் ஷா அனைத்துலக விமான நிலையம், ஈப்போவில் வர்த்தகம், தொழில்துறை மற்றும் சுற்றுலாத் துறை நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“இதற்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் கடந்த காலத்தில், நாங்கள் ஈப்போ விமான நிலையத்தை விரிவுப்படுத்த விரும்பியபோது, ​​கோலாலம்பூரிலிருந்து ஈப்போவிற்கு அதிக விமானங்கள் இல்லை என்று நாங்கள் நினைத்ததால் அது தாமதமானது. மக்கள் சில நேரங்களில் வழக்கமான ரயில்களைப் பயன்படுத்தத் தேர்வு செய்கின்றனர். ஆனால், இப்போது அது செனாயிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும், கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங் போன்ற பிற பகுதிகளுக்கும் இன்னும் பரந்த அளவில் சிந்திக்கப்படுகிறது. யாருக்குத் தெரியும். இது அதன் தனித்துவமான கவனத்தை ஈர்ப்பதாக அமையலாம்”, என்று அவர் கூறினார்.

மேம்படுத்தப்பட்ட அம்சங்களில், முனையம் 10 விழுக்காடு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

அதைத் தவிர்த்து, புதிய காத்திருக்கும் இடம், குடிநுழைவுத்துறை வசதி, மறைக்காணி, விமான பயணத் தகவல் அமைப்பு காட்சி போன்றவையும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

Source : Bernama

#PMAnwar
#WarisanKL
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews