என் தமிழ்

தி.மு.க.வில் இருந்து விலகல்: நடிகை குஷ்பு பா.ஜனதாவில் சேருவாரா?

kus

நடிகை குஷ்பு தி.மு.க.வின் முன்னணி பேச்சாளராக அறிவிக்கப்பட்டவர். ஆனால் கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு குஷ்பு மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருந்த அவர், கடைசி நேரத்தில் பிரசார களத்துக்கு அனுப்பப்பட்டார். அதிருப்தியான மனநிலையில் கட்சிக்குள் வலம் வந்த குஷ்பு நேற்று திடீரென்று தி.மு.க.வில் இருந்து விலகினார்.

அவர் கருணாநிதிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் ‘என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒரு வழிப்பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை தி.மு.க.வில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க முடியாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே கனத்த இதயத்துடன் விலகுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க.வை விட்டு விலகிய குஷ்பு பா.ஜனதாவில் சேர இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நடிகையும், மத்திய மந்திரியுமான ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி பற்றி காங்கிரஸ் விமர்சனம் செய்தபோது ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக குஷ்பு கருத்து தெரிவித்தார்.

மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜூக்கும் வாழ்த்து தெரிவித்தார். பா.ஜனதா ஆதரவு மனோ நிலையில் இருக்கும் குஷ்புவுக்கு பா.ஜனதாவிலும் நெருங்கிய நட்பு வட்டாரம் உள்ளது.

மேலும் நரேந்திரமோடி தமிழகத்துக்கு தேர்தல் பிரசாத்துக்கு வந்த போது பா.ஜனதாவில் குஷ்பு இணைவதற்கான முயற்சிகள் நடந்தது. அப்போது கருணாநிதி தலையிட்டதால் குஷ்பு தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

இப்போது தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதால் அவர் பா.ஜனதாவில் விரைவில் சேருவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

குஷ்பு பா.ஜனதாவில் இணைவர் என்ற நம்பிக்கை பா.ஜனதா வட்டாரத்தில் பலமாக உள்ளது. இது பற்றி கட்சியின் முன்னணி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:–

குஷ்பு ஏற்கனவே பா.ஜனதாவில் சேர முயற்சித்தபோது தென்சென்னை அல்லது கோவை தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டார். அப்போதைய சூழ்நிலையில் எதுவும் நடைபெறவில்லை.

இப்போது கட்சி பலமாகி விட்டதால் பலர் ஆர்வத்துடன் வருவார்கள். அந்த வகையில் குஷ்புவும் வருவதில் ஆச்சரியமில்லை. அவருக்கு டெல்லி தலைவர்களுடன் நட்பு உள்ளது. எனவே விரைவில் வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எங்களை பொறுத்தவரை கட்சியை பலப்படுத்த வேண்டும். அதற்கு யார் வந்தாலும் வரவேற்போம் என்றார்.

Scroll to Top