மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் உத்தரவு

மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் உத்தரவு

chi

உக்ரைனில் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கேமுன் உத்தரவிட்டுள்ளார்.  ரஷ்யா எல்லை அருகே உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியில் 298 பேருடன் சென்று கொண்டிருந்த  மலேசிய விமானம் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. 33 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துக்கொண்டிருந்த போது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 298 பேரும் கொல்லப்பட்டனர். ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே தாக்குதலுக்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ள உக்ரைன் அரசு விமானம் வீழ்த்தப்பட்ட பிறகு கிளர்ச்சியாளர்கள் பேசிக்கொண்ட ஒலிநாடாவை வெளியிட்டுள்ளது. உக்ரைன் அரசின் குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் புடின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். விபத்து நிகந்த இடம் உக்ரைன் நாட்டிற்கு சொந்தமான இடம் என்பதால் அந்நாட்டு அரசே பொறுபேற்க வேண்டும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

விமானாம் வீழ்த்தப்பட்டது குறித்து உக்ரைன், மலேசியா ஆகிய நாடுகள் தனித்தனியே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். உக்ரைன் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் எனக் கருதி மலேசிய விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் முழு உண்மையை கண்டறியும் வகையில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இதனை ஏற்று சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர்  பான்கேமுன் உத்தரவிட்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து  முடிவெடுப்பதற்காக ஐநா பாதுகாப்பு அவையும் அவசரமாக கூடுகிறது. இதனிடையே சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தை பின்தொடர்ந்து ஏர் இந்தியாவுக்கு சொந்தமான எஐ-113 விமானம் 25கிமீ இடைவெளியில் மலேசிய விமானத்தை பின்தொடர்ந்ததால் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.