என் தமிழ்

PCDS 2030 : மக்களுக்கான பலன்களை உறுதி செய்யும் சரவாக் குடிமைப் பணி

குச்சிங், 17 ஜூன் 2026 : கோவிட்-19க்கு பிந்தைய மேம்பாட்டு உத்தி (PCDS) 2030-ஐ திறம்பட செயல்படுத்தி, அதன் பலன்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் சரவாக் குடிமைப் பணி (SCS) சரியான பாதையில் சென்று வருவதாக சரவாக் மாநிலச் செயலாளர் டத்தோ அமர் முகமது அபு பக்கர் மர்சுகி தெரிவித்துள்ளார்.

குச்சிங்கில் உள்ள புல்மேன் ஹோட்டலில் நடைபெற்ற சரவாக் வனவியல் கழகத்தின் (SFC) 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவை விருது (APC) வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர், சரவாக் முதலமைச்சர் முன்னெடுத்து வரும் அனைத்து வளர்ச்சி முயற்சிகளுக்கும் ஆதரவளிக்க மாநில குடிமைப் பணி எப்போதும் தயாராக இருப்பதாக கூறினார்.

மக்களை மையமாகக் கொண்ட நிர்வாக அணுகுமுறையை SCS பின்பற்றுவதாக குறிப்பிட்ட அவர், திட்டமிடப்படும் மற்றும் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் மக்களால் உணரக்கூடிய வகையில் பலன்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிவித்தார்.

அரசுச் சேவையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு ஊழியர்களின் திறன்களை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் புதிய பணியியல் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், “மீண்டும் பார்வையிடுதல், மறுசிந்தனை செய்தல் மற்றும் புத்துணர்ச்சி பெறுதல்” என்ற 3R அணுகுமுறையை அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் சேவை வழங்கலில் புதுமை மற்றும் செயல்திறனை அதிகரிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சரவாக் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களின் பலன்கள் தற்போது மக்களால் நேரடியாக உணரப்படுவதாகவும் அவர் கூறினார். கிராமப்புற சாலை மற்றும் பாலம் கட்டுமானங்கள், நீர் மற்றும் மின்சார விநியோகத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநில வளர்ச்சித் திட்டங்களில் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் இருந்தாலும், அனைத்து வளர்ச்சி முயற்சிகளின் பலன்களும் மக்களை முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதில் சரவாக் குடிமைப் பணி தொடர்ந்து உறுதியுடன் செயல்படும் என டத்தோ அமர் முகமது அபு பக்கர் மர்சுகி தெரிவித்தார்.

Scroll to Top