கோலாலம்பூர், 10 மார்ச் 2026 : இந்துமதத்தின் புனிதச் சின்னமான திரிசூலத்தை (Trisul) ஒருவர் காலால் மிதித்து சேதப்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் (ADUN Sentosa) டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை மிகக் கடுமையாக எடுத்துக் கொண்டுள்ள அவர், இது இந்து சமயத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்லாது, நாட்டில் இன மற்றும் மத ஒற்றுமையை பாதிக்கக்கூடியதாகும் என்று கூறினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இது ஒரு சிறிய விஷயம் அல்ல. இது மத மரியாதையும் நாட்டின் ஒற்றுமையும் தொடர்புடையது. மலேசியா பல மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரை ஒருவர் மதித்து வாழும் நாட்டாக உருவாகியுள்ளது. எந்த மதத்தின் புனிதச் சின்னத்தையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், புனித குர்ஆன் அவமதிக்கப்பட்ட சம்பவங்களில் எவ்வாறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ, அதேபோல் சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில் பிற மதங்களின் புனிதச் சின்னங்களை அவமதிப்பவர்களுக்கும் அதே அளவு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் அதிகாரப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மலேசிய ராயல் போலீஸ் (PDRM) விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில், அனைத்து மலேசியர்களும் அமைதியை காக்க வேண்டும் என்றும் எந்தவித தூண்டுதல்களுக்கும் இடமளிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
“நாம் எங்கள் மதம் மதிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பதுபோல, மற்றவர்களின் மதத்தையும் மதிக்க வேண்டும். நாம் ஒன்றாக கட்டியெழுப்பிய நாட்டின் ஒற்றுமையை பாதிக்கக்கூடாது,” என்று டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்தார்.






