என் தமிழ்

பெற்றோரும் மாணவரின் வெற்றியை உறுதி செய்யலாம் – ‘இம்பாக் 5.0’ பயிற்சி திட்டம் தொடக்கம்

பெட்டாலிங் ஜெயா, 07 மார்ச் 2026 : பெட்டாலிங் ஜெயா, மார்ச் 7 – மலேசியத் தமிழ் அறவாரியம் முன்னெடுத்து வரும் “இம்பாக்” (IMPAK) பெற்றோர் திறன் மேம்பாட்டு திட்டம், இவ்வாண்டு மேம்படுத்தப்பட்ட வடிவில் ‘இம்பாக் 5.0’ என்ற பெயரில் செயல்படுத்தப்படவுள்ளது.

2003 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நிறுவப்பட்ட மலேசியத் தமிழ் அறவாரியம், நாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளுடன் இணைந்து பல்வேறு கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. ஆசிரியர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்த அமைப்பின் பயிற்சி மற்றும் வழிகாட்டல் திட்டங்கள் மூலம் பலனடைந்துள்ளனர்.

இம்பாக் திட்டம், பள்ளி மேலாளர் வாரியம், மாணவர் தன்னாளுமை முகாம், தமிழ்க்கல்வி ஆய்விதழ் மற்றும் பள்ளி நிர்வாகப் பயிற்சி போன்ற பல திட்டங்கள் மூலம் தமிழ்க் கல்விப் பங்குதாரர்களுக்கு ஊக்கமளித்து வருகிறது.

அந்த வகையில், தமிழ்ப்பள்ளிகளின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான பெற்றோர்களை இலக்காகக் கொண்டு இம்பாக் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ‘இம்பாக் 5.0’ திட்டம் புதுப்பிக்கப்பட்ட பயிற்சி முறைகளுடன் செயல்படுத்தப்படவுள்ளது. இதில் பங்கேற்கும் பெற்றோர்கள் 10 வாரங்களுக்கான பெற்றோரியல் பயிற்சியை முடித்த பின், முக்கிய செயல்திறன் குறியீட்டு (KPI) திட்டமாக மாணவர் தன்னாளுமை முகாம் (TEC) ஒருங்கிணைக்கப்படவுள்ளது.

2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இத்திட்டத்தில் பங்கேற்று பயனடைந்துள்ளனர். ‘இம்பாக் 5.0’ திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான முன்னோக்குத் திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் மேலும் 10,000 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை திறன் மேம்படுத்துவதே தமிழ் அறவாரியத்தின் இலக்காகும்.

2026 ஆம் ஆண்டில் தேசிய அளவில் 50 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 1,500 பெற்றோர்களை இந்தத் திட்டத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயணம் சான்றிதழ் வழங்கும் விழாவுடனும் மாணவர் தன்னாளுமை முகாமுடனும் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027 முதல் 2030 ஆம் ஆண்டு வரை இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, நாடு முழுவதும் “பெற்றோர் பங்காளர்கள்” சூழலமைப்பை உருவாக்கும் ஐந்தாண்டு செயல்திட்டமாக அமல்படுத்தப்பட உள்ளது.

இதுவரை தமிழ் அறவாரியம் 68 தமிழ்ப்பள்ளிகளை அணுகியுள்ளது. ‘இம்பாக் 5.0’ திட்டம் வரும் மார்ச் 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவுள்ளது.

இதனை முன்னிட்டு, இம்பாக் பயிற்றுநர்களுக்கான சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி மார்ச் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கிரிஸ்டல் கிரௌன் ஹோட்டலில் நடைபெறுகிறது. மார்ச் 7 அன்று நண்பகல் 1 மணி முதல் தொடங்கும் இந்தப் பயிற்சி, மார்ச் 8 அன்று நண்பகல் 1 மணி வரை நடைபெறும். இதில் 27 பயிற்றுநர்களும் 3 ஒருங்கிணைப்பாளர்களும் பங்கேற்கின்றனர்.

இந்தப் பயிற்றுநர்கள் சிலாங்கூர், பேராக், கோலாலம்பூர், ஜொகூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பல மாநிலங்களில் ஒரே தரநிலையிலான செயல்பாட்டை உறுதி செய்வதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

‘இம்பாக் 5.0’ பயிற்றுநர்கள் வெறும் பயிற்சி வழங்குபவர்கள் அல்ல; அவர்கள் சமூகத்தில் நம்பிக்கையை விதைப்பவர்கள் என்றும், பெற்றோரின் தன்னம்பிக்கையை உயர்த்தி வீட்டுக்கும் பள்ளிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் பாலங்களாக செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் வெற்றி பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையால் மட்டுமல்ல; தன்னம்பிக்கை பெற்ற பெற்றோர், ஆதரவு பெற்ற மாணவர்கள், வலுப்பெற்ற பள்ளிகள் மற்றும் உறுதியான சமூகத்தை உருவாக்குவதன் மூலம் அளவிடப்படும் என்றும் தமிழ் அறவாரியம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பொறிஞர் க. மதன் ராஜ் அவர்களை 016-463 5423 என்ற எண்ணிலும் mathanraj.tamilfoundation@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், திட்ட அதிகாரி குமாரி ரினிஷா அவர்களை 016-4180165 என்ற எண்ணிலும் info@tamilfoundation.org என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

Scroll to Top