என் தமிழ்

பள்ளிகளின் நன்னெறி பாடத்திட்டத்தில் ‘சனாதன தர்மம்’ சேர்க்கும் முன்மொழிவு கைவிடப்பட வேண்டுமென மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு வலியுறுத்தினார்

11 டிசம்பர், 2026 : பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படை பொருள்முதல்வாத சிந்தனையில் தான் இருந்தது. அதனால்தான் கல்வி அனைவருக்கும் கிடைத்து, சாதாரண மக்களிலிருந்து அரசர்கள் வரை சங்க இலக்கியத்தில் பங்கேற்க முடிந்தது. எனவே கல்வி என்பது அனைவரையும் உள்ளடக்கும் பொதுக்கல்வியாக இருக்க வேண்டும்.

‘சனாதன தர்மம்’ என்ற பெயரில் நன்னெறி பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது, மாணவர்களிடையே மத அடிப்படையிலான புதிய பிரிவுகளை உருவாக்கும். இது கல்வியின் ஒன்றிணைக்கும் பண்புக்கு எதிரானது. நடப்பு கல்வித் திட்டத்தில் குறை இருந்தால், அதை உள்சீர்திருத்தம் மூலம் சரிசெய்ய வேண்டும்; முழுக்கல்வி முறையையே மாற்றுவது தேவையற்றது.

மேலும், ‘சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே’ என பாடப் புத்தகங்களில் கூறப்படுவது தவறானதும் பின்னடைந்ததும் ஆகும். வர்ணாசிரமம் போன்ற கருத்துகள் சமத்துவத்துக்கும் மனித மரியாதைக்கும் எதிரானவை. ‘சனாதன தர்மம்’ என்பது எல்லா இந்துக்களும் பின்பற்றிய ஒன்றல்ல; பல மதங்களும் சிந்தனைகளும் கலந்து உருவானதே இன்றைய இந்து மதம்.

எனவே, கல்வியில் பழைய கருத்துகளைத் திணிக்காமல், ‘திருக்குறள்’ போன்ற மனிதநேய நெறிகளை நன்னெறி பாடத்திட்டத்தின் மையமாக்க வேண்டும். பொதுக்கல்வியின் நோக்கம், நல்லொழுக்கமுள்ள மாணவர்களை உருவாக்குவதே. அதற்கான சூழலை உருவாக்குவது அரசின் கடமை என மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத் தலைவர் நாக.பஞ்சு தெரிவித்தார்.

Scroll to Top