அழல் என்ற தமிழ் படம் மலேசிய சிங்கப்பூர் கூட்டு தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கிறது. மலேசிய கலைஞர் திரு. விஜய் எமர்ஜென்சி யின் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த அழல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 02/08/2017 அன்று மாலை 08.00 மணிக்கு துவங்கி ஜி.எஸ்.சி. நியூ செண்ட்ரலில் மிகப் பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சியாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் கலந்துகொண்டு அழல் திரைப்படத்தின் இசையை வெளியிட்டார். அழல் திரைப்படத்தின் குறுந்தட்டை வெளியிட்டு நிகழ்ச்சிக்கு வந்து குறுந்தட்டை வாங்கியவர்களுக்கு தனது கரங்களால் டத்தோஸ்ரீ சுப்ரா வழங்கினார். அவருடன் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் கலந்து கொண்டார்.
சிவராஜ் சந்திரன் அழல் திரைப்படக் குழுவினரை வாழ்த்தி பேசினார். அப்போது நமது உள்ளூர் கலைஞர்களையும் அவர்களின் படைப்புகளையும் ஊக்குவித்து அவர்களை வெற்றி பெறச் செய்ய ம.இ.கா தனது பங்களிப்பை செய்ய வேண்டும் என்றும், அதற்கு டாக்டர் சுப்ரா அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி நல்லது செய்ய வேண்டும் எனவும் டாக்டர் சுப்ராவிற்கு கோரிக்கை வைத்தார். விஜய் எமர்ஜென்சியின் MStar இசை கல்லூரியும் சேவைகள் பற்றி வாழ்த்தினார். மலேசிய தமிழ் படங்களை எப்படி இந்தியாவில் சந்தைபடுத்துதல் குறித்து கலைஞர்கள் யோசிக்க வேண்டும் என்றும் அதற்கு ம.இ.கா உதவி புரியும் என்றும் தனது உரையில் சிவராஜ் உறுதி அளித்தார். எழுத்தாளர்களுக்கு உதவுவதை போலவே மற்ற கலைஞர்களுக்கும் ம.இ.கா உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அவரை தொடர்ந்து பேசிய டாக்டர் சுப்ரா வாழ்க்கையில் நல்ல நிலையில் உள்ள மலேசிய இந்திய தொழில் அதிபர்கள் மலேசிய இந்திய திரைப்படங்களை ஊக்குவித்து அதற்கு தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்திய சமுதாயத்தில் வியாபாரத்தில் இருக்ககூடியவர்கள் தங்களது விளம்பர செலவுகளை மலேசிய இந்திய கலைஞர்களை சார்ந்து அமைத்துக் கொண்டால் நமது கலைஞர்களின் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும் என டத்தோஸ்ரீ தனது உரையில் குறிப்பிட்டார். அழல் திரைப்படத் தயாரிப்பாளர் விஜர் எமர்ஜென்சி, இயக்குநர் சரவணன் மற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
நிகழ்ச்சியின் அழல் திரைப்படக் குழுவினரான விஜர் எமர்ஜென்சி, இயக்குநர் சரவணன், இசை அமைப்பாளர் ரூபேஷ், மற்றொரு தயாரிப்பாளரான ஆதித்யன் மேகநாதன், படத்தின் நாயகர் அரவிந் நாயுடு, நாயகி யாஸ்வின் தேவி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள டத்தோ ஷாஷா ஸ்ரீ, பாடலாசிரியர் பீனிக்ஸ்தாசன் மற்றும் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மலேசிய மற்றும் சிங்கப்பூர் திரைதுறையினர் பலரும் மீடியா நண்பர்களும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். அழல் குழுவினர் நடத்திய நிரஞ்சனா ரீமிக்ஸ் பாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பாடகர்களுக்கு அழல் இசை வெளியீட்டு விழா மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர்களும் நிரஞ்சனா பாடலை அழகாக பாடினர்.